(பாயிஸ்)
முடியுமானால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் துணையின்றி தொலைக்காட்சி விவாதம் ஒன்றுக்கு அல்லது பொது விவாதம் ஒன்றுக்கு வருமாறு ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவுக்கு, நீதி மற்றும் சிறைச்சாலைகள் புனரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரள சவால் விடுத்தார்.
இன்று (07) ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி தேர்தலுக்கான இரத்தினபுரி மாவட்ட தேர்தல் பிரச்சார காரியாலயத்தில் இரத்தினபுரி வெரலுப பகுதியில் திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் கோட்டாபய ராஜபக்ஷவின் குடியியல் உரிமை தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு சரியானது என்றும் நீதியானது என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்றுக் கொண்டுள்ளார். இதனை நாட்டின் நீதியமைச்சர் என்ற வகையில் மகிழ்ச்சியடைகின்றேன்.
அரசாங்கம் நாட்டை அமெரிக்காவுக்கு விற்கப்போதாகவும் சோபா உடன் படிக்கையை மேற்கொண்டு நாட்டை தாரை வார்க்கப்போவதாகவும் பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தும் எதிர்க்கட்சியினர் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வேட்பாளர் ஒருவரை நாட்டின் ஜனாதிபதியாக்க கடுமையாக முயற்சித்து வருகின்றமை விந்தையாக இருக்கிறது.
ஒரு புறம் அமெரிக்கா சார்பான ஜனாதிபதி வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவு வழங்கும் அதேவேளை அமெரிக்க செயல்பாடுகளுக்கு எதிராக போர் கொடி தூக்கும் எதிர்க்கட்சியின் சதி நடவடிக்கைகள் என்னவென நாம் அவதானித்துள்ளோம் எனவும் அவர் தெரிவித்தார்.
إرسال تعليق