Hot Posts

Trending

உயர்தரக் கல்வி நடவடிக்கைகள் முடிவடைந்த கையோடு படிப்பைத் தொடர்வதா? அல்லது இடை நிறுத்துவதா? என, மாணவிகளிடம் கேள்வி எழுப்பிய பைஸர் முஸ்தபா

மாணவிகள் உயர்தரப் பரீட்சை எழுதி முடிவடைந்த கையோடு 18 வயது நிரம்பியதும், அக்கல்வியைத்  தொடர்வதா? அல்லது இடை நிறுத்துவதா? என, மாணவிகளிடம் கேள்வி எழுப்பிய முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா,  மாணவிகள் தமது கல்வி நடவடிக்கைகளை உயர்தரக் கல்வியுடன்  மாத்திரம்  நிறுத்திக் கொள்ளாது, தொடர்ந்தும் முன்னெடுத்துச் சென்று, இச்சமூகத்திற்கு எதிர்காலத்தில் சிறந்த வழிகாட்டிகளாகத் திகழ வேண்டும் என்பதே தனது எதிர்பார்ப்பாகும் எனத்  தெரிவித்தார்.

 கொழும்பு - தெமட்டகொடை, ஹைரிய்யா பெண்கள் கல்லூரியின் இரு பகுதி வகுப்பறைக் கட்டிடங்களை இணைக்கும் மேம்பாலம் (24) சனிக்கிழமை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. 

பாடசாலை அதிபர் ஏ.எல்.எஸ். நஸீரா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இச்சிறப்பு நிகழ்வில் அவர் மேலும் பேசும்போது, மாணவர்களை பெற்றோர்கள் எப்பொழுதும் ஊக்குவித்துக் கொண்டே இருக்க வேண்டும். மாணவர்களின் கல்வி விடயத்தில் அலட்சியப் போக்கு காட்டாமல், அவர்களுக்கு நல்ல வழிகாட்டல்களை அமைத்துக் கொடுக்க வேண்டும். 

இன்றைய எமது மாணவச் செல்வங்கள், நாளைய சமுதாயத்தின் தலைவர்கள். இதனை உணர்ந்து, ஒவ்வொரு பெற்றோரும் மிகுந்த கரிசனையுடனும் அக்கறையுடனும் செயற்பட வேண்டும். 

சில பெற்றோர்கள், தமது பிள்ளைகள் விடயத்தில் எந்தவித அக்கறைகளும் கொள்ளாது, ஏனோ தானோ என அவர்களை விட்டு விடுகின்றார்கள். இது பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்குச் செய்யும் மிகப் பெரிய துரோகமும் அநியாயமுமாகும். இந்நிலை எம்மிடமிருந்து மாறவேண்டும். 

பெற்றோர்கள், தமது பிள்ளைகளிடமிருந்து தூர விலகிச் செல்லாது, எப்பொழுதும் அவர்களின் கண்காணிப்பில் வைப்பதும் வளர்ப்பதும்,  இன்றைய காலத்தின் கட்டாயத் தேவையாகும் என்றார்.

    முன்னாள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவினால் மேம்பாலத்தின் நினைவுத் தூபி திறந்து வைக்கப்பட்டதுடன், முன்னாள் அமைச்சர் பெளஸியினால் மேம்பாலத்திற்கான நாடா வெட்டப்பட்டு குறித்த மேம்பாலம் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

   இந்நிகழ்வில், கெளரவ அதிதிகளாக முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். பெளஸி, மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அஸாத் சாலி, முன்னாள் உறுப்பினர் மொஹமட் பாயிஸ், மேல் மாகாண கல்வித் திணைக்களப் பணிப்பாளர் சிறிலால் நொய்னிஸ் உள்ளிட்ட கல்வி அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.  

( ஐ. ஏ. காதிர் கான் )

Post a Comment

0 Comments